Skip to main content

தருமபுரி பூர்வ சரித்திரம்

சங்க கால ஆட்சியாளர்களான சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்திருக்காவிடினும் தான் சார்ந்த பகுதி முற்காலத்தில் எந்த அரசின் ஆட்சிப்பகுதியாக இருந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்வதில் அனைவருக்கும் ஆர்வமிருக்கும்.
மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தங்களைப் பாண்டிய நாடு என்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சோழ நாடு என்றும் கோவையைச்  சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சேர நாடு, கொங்கு நாடு என்றும் வகைமைப்படுத்திக் கொள்வர். ஆனால் யாதொருவராலும் கண்டுகொள்ளப்படாத, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தினர், நீங்களெல்லாம் எந்த அரசின் ஆட்சிப்பகுதியில் இருந்திருப்பீர்கள் என்று கேட்டால் உதட்டைப் பிதுக்குவார்கள். நாமெல்லாம் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிப் பகுதியில் வருவோம், அவனது மூதாதையர்கள் சேர மரபைச் சார்ந்தவர்கள். அதனால் நாம் சேர மண்டலத்தைச் சார்ந்தவராக இருப்போம்,  அதியமான் சோழப் பேரரசின் கீழ் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதனால் சோழ மண்டலமாக இருக்கலாம் மாவட்டத்தில் எத்தனை கல்வெட்டுகள் கன்னட மொழியில் இருக்கின்றன தெரியுமா? கன்னடம் பேசுபவர்களும் மிகுதியாக இருக்கின்றனர். அதனால் ஏதாவது கன்னட ராஜ்ஜியத்தின் கீழ் தான் வருவோம் என்று ஆளுக்கொரு பதிலை தூக்கிக் கொண்டு வருவர். இதையெல்லாம் கேட்கும் ஒருவருக்கு, அடப்போங்கையா.. ஏதோவொரு நாடு, எப்பையோ இருந்ததுக்கு இப்ப அடிச்சிகிட்டு.. என்றுதான் தோன்றும்.

பத்திரிகையாளர் சமஸ் அவர்கள், திருக்கோவிலூரில் உள்ள ஒரு பள்ளி மாணவனுக்கு மௌரியப் பேரரசைப் பற்றித் தெரியும். ஆனால் அவன் மண்ணை ஆண்ட மலையமான்களைப் பற்றித் தெரியாது என்பதே தமிழ்நாட்டின் நிலை என்பார். அதுதான் தருமபுரியின் நிலைமையும். பேரரசின் ஆட்சிப் பகுதியில் இருந்தவர்களுக்கு, கோயில்கள், கட்டிடங்கள், ஊரின் பெயர்கள், ஏரி, குளங்கள், கதையாடல்கள் மூலம் ஏதோவொரு வகையில் வரலாறு நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.வரலாறும் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.  பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றிருக்கும்.  ஆனால் சிற்றரசர்களின் ஆட்சிப்பகுதிகளில் அப்படியான வாய்ப்புகள் குறைவு. பல சமயங்களில் பலரால் ஆட்சி கைமாறிக்கொண்டே இருப்பதால் வரலாறு அங்கே சிதைக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றது. மக்களின் நினைவுகளிலிருந்தும் எளிதில் மறைந்து விடுகிறது.

ஒரு விஷயத்தைப் பற்றி அறிய இணையத்தில் சொடுக்கினால் ஒரு நொடியில் இன்று எக்கச்சக்கமான தகவல்கள் நம் முன்னே கொட்டுகின்றன. ஆனால் எந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாத, முற்றிலும் களப்பணியையே கோருகின்ற இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தருமபுரியின் வரலாற்றை எழுதிய டி.கோபால செட்டியாரின் பணி அளப்பரியது.

தருமபுரியின் பொக்கிஷம்



1939ம் ஆண்டு டி.கோபால செட்டியார் அவர்கள் எழுதிய, தருமபுரியின் முதல் வரலாற்று நூலான "தருமபுரி பூர்வ சரித்திரம்" எனும் நூல், பதிப்பாசிரியர் இ.தங்கமணி அவர்களின் தீவிரமான முயற்சியால் திருவள்ளுவர் பொத்தக இல்லத்தின் வெளியீடாக 2022ம் ஆண்டு மறுபதிப்பு கண்டிருந்தது.

பேராசிரியர் த.பழமலை அவர்கள் இயற்றிய "தருமபுரி மண்ணும் மக்களும்" என்னும் நூலில் இடம்பெற்றிருந்த கோபால செட்டியார் பற்றிய குறிப்புகள், இந்த நூலின் தேடலுக்கு வித்தாகியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்து தமிழ் திசை நாளிதழில் இதன் நூல் அறிமுகம் இருந்தது. தருமபுரி புத்தகத் திருவிழாவில் தான் கண்டுபிடிக்க முடிந்தது. நானும் இத்தனை ஆண்டுகளில் தருமபுரியின் வரலாற்றை முழுமையாகப் படித்ததில்லை. 

அதியமான் முதல் தாமஸ் மன்றோ வரை

அதியமானைப் பற்றி தருமபுரி மக்கள் அதிகபட்சம் அறிந்தது, "ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான்" என்பதுதான். தருமபுரி நகரின் நான்கு ரோடு சந்திப்பில் அக்காட்சியை சிலையாக வைத்திருப்பார்கள். ஒருமுறை அந்த சிலையில் நெல்லிக்கனி காணாமல் போக, மீண்டும் புதுப்பித்தார்கள். கோபால செட்டியார், சங்க காலப் பாடல்களில் இருக்கும் அதியமானைப் பற்றிய பதிவுகளிலிருந்து தருமபுரியின் வரலாற்றைத் தொடங்கியுள்ளார். நூல்களிலிருந்து தொகுத்த தகவல்கள் மட்டுமல்லாமல் வரலாற்று எச்சங்கங்களின் அப்போதைய நிலையை தான் கண்டவற்றிலிருந்தும் எழுதியிருக்கிறார்.

தருமபுரியின் பழங்காலத்துப் பெயர் 'தகடூர்' என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அது எப்படி 'தருமபுரி' என்று மாறியதென்று கேட்டால் விழிப்பர்கள். தருமபுரி என்ற பெயரே இந்நூல் எழுதப்படுவதற்கு முன்னூறு வருடங்களுக்கு முன்னர் தான் வந்தது என்ற தகவல் முற்றிலும் புதிதாக இருந்தது.அதன் விளக்கத்தை நூலில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

அதியமான் நெடுமானஞ்சியின் மகன் பொருட்டெழினிக்குப் பிறகு தகடூர் அரசர்களின் சங்கதிகள் ஏதும் தோன்றவில்லை. எழினி வம்சத்தினர் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம் வரை ஆண்டு வந்ததாகவும் பின்னர் கொங்கு நாட்டு அரசருக்கு பாத்தியப்பட்டு அவர்கள் வசமிருந்ததாகவும் குறிப்பிடப்பட்படுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டில் பெனுகொண்டாவின் விஜயநகர அரசனின் மருமகனான ஜகதேவராயர் என்பவரின் பாராமஹால் (சேலம் ஜில்லா) ராஜ்ஜியத்தின் கீழ் தருமபுரி வந்துள்ளது. பின்னர் மதுரையைச் சார்ந்த நாயக்கரின் ஆட்சியின் கீழ் வந்து மைசூர் ராஜ்ஜியத்துடன் இணைந்துள்ளது. அது ஹைதர் அலியின் வசமாகியிருக்கிறது. ஹைதரின் மகன் திப்பு சுல்தான் ஆட்சியில் ஆங்கிலேயரிடையே நடந்த போரில், 1792ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி போரில் தோற்றமையால், திப்பு சுல்தான் தன் ராஜ்ஜியத்தில் பாதியை ஆங்கிலேயருக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. இப்படியாக ஆங்கிலேயரின் வசம் தருமபுரி வந்திருக்கிறது.

தருமபுரியில் தாமஸ் மன்றோ

ரயத்வாரி வரிவசூல் முறையை அறிமுகப்படுத்திய தாமஸ் மன்றோ, அவரின் பல்வேறு செயல்திறமைகளால் நினைவுகூறப்படும் பிரிட்டிஷ் அதிகாரி. சென்னை அண்ணா சாலையில் அவருக்கொரு சிலையும் உள்ளது. அப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்ற மன்றோ தருமபுரியில் ஏழு வருடங்கள் கலெக்டராக இருந்துள்ளார் எனும் தகவல் தருமபுரி மக்களே அறியாதது.

அந்நாட்களில், இடைத்தரகர்களால் அரசுக்கு வரி செலுத்துவதில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களே நேரடியாக வரியை அரசுக்குச் செலுத்தும் சீர்மிகு வரிமுறையைக் கொண்டு வர மன்றோ சிந்தித்திருக்கிறார். அதனை தருமபுரியில் தான் முதன்முதலில் சோதித்துப் பார்த்திருக்கிறார். அது நல்ல பயனளிக்கவே, பிரிட்டிஷ் அரசாங்கம் மற்ற மாகாணங்களிலும் அறிமுகப்படுத்தியது.

தருமபுரியில் தங்கியிருந்த காலத்தில் அவர் வெட்டிய குளம், பராமரித்த தோட்டம் அவரின் பங்களா போன்றவற்றின் தகவல்கள் இந்நூலின் சுவாரசியமான பகுதி. கோபால செட்டியார் வாழ்ந்த காலத்தில் அவற்றின் நிலையைக் கண்டு வருந்தி எழுதியிருக்கிறார். தாமஸ் மன்றோ தருமபுரியை விட்டுச் செல்லும் பொழுது, "இவ்விடத்தை விட்டுப் பிரிய நேர்வது, வெகு நாள் பழகிய சினேகிதற்களை விட்டுப் பிரிந்தால் எவ்வித கவலை உண்டாகுமோ அவ்வித கவலை உண்டாகிறது" என்று எழுதியிருக்கிறார்.

டி.கோபால செட்டியார்:

 

இவர் 1867ம் ஆண்டு, அன்றைய சேலம் ஜில்லாவில், தருமபுரி தாலுகா, கடத்தூரில் பிறந்துள்ளார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் F.A படிப்பு முடித்துவிட்டு தருமபுரியில் சிறிது காலம் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

சட்டக் கல்வி முடித்து திருப்பத்தூரில் 1894 முதல் 1911 வரை வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். பல பொதுநல வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளார்.  சைவ சித்தாந்தத்தில் வேரூன்றியவரான இவர் பின்னாட்களில் ஸ்காட்லந்து நாட்டைச் சார்ந்த இம்மானுவேல் ஸ்வீடன்பர்க்கின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு இரண்டு தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்களை இயற்றியுள்ளார். ஸ்வீடன்பர்க்கின் பெயரில் "ஸ்வீடன்பர்க் சொஸைட்டி" என்ற அமைப்பை  நடத்தியிருக்கிறார்.

பெரியாருக்கு முன்னோடி



சென்னையில் 1907ம் ஆண்டு "The New Reformer" எனும் ஆங்கில மாத இதழைத் தொடங்கி 1917 வரை நடத்தியுள்ளார். தொடர்ச்சியாக சமூக, சமய, பொருளாதார மறுமலர்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய பல சீர்திருத்தக் கருத்துக்களுக்கு The New Reformer இதழே காரணம் என்று கூறியதாகச் சொல்கிறார்கள்.

அவரின் இதழுக்கு வெளிநாட்டிலிருந்து பல சந்தாதாரர்கள் இருந்திருக்கின்றனர். ஆறாம் ஜார்ஜ் இளவரசர் இந்தியா வந்திருந்த பொழுது இவரை அழைத்து, தன்னால் ஆகும் உதவி உண்டா? என்று கேட்டதற்கு, தனது இதழை ஆங்கில நாட்டு நூலகங்களில் வாசகர்கள் படிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டாராம்.அவரின் நினைவாக "Prince of Wale's Reading Room" என்ற வாசக சாலையை திருப்பத்தூரில் வைத்து நடத்தியுள்ளார். முதலாம் உலகப் போரினால் காகிதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இதழை நிறுத்தும்படியாக ஆயிற்று. அவர் நடத்திய இதழின் ஒரு பிரதி கூட கிடைக்ககாதது இதழியல் துறைக்கொரு இழப்பு.

டால்ஸ்டாயுடனான கடித உறவு

உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரும் தத்துவியலாளருமான லியோ டால்ஸ்டாயுடன் கோபால செட்டியாருக்கு கடிதப் போக்குவரத்து இருந்திருக்கிறது. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவர் இந்தியாவெங்கும் அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் கூட அவர் அறியப்படவில்லை. அக்கடிதகங்களை The New Reformer இதழில் கோபால செட்டியார் வெளியிட்டு வந்துள்ளார்.

டால்ஸ்டாய் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தன்னைப் பற்றிய அபிப்பிராயங்களை எழுதுமாறு உலகில் உள்ள இருநூறு பேருக்கு கடிதம் எழுதினார். அதில் ஐம்பத்தைந்தை மட்டுமே ஏற்றுக் கொண்டார். அவற்றுள் இந்தியாவில் கோபால செட்டியாரும் ஆல்மாமூன் சக்கரவர்த்தி என்பருமே ஆவர்.

இத்தகவலை நாம் எளிமையாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பட்டியலில் காந்தியோ நேருவோ இருந்திருந்தால் இந்நேரம் அக்கடிதம் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் கோபால் செட்டியார்-டால்ஸ்டாய் கடிதங்களில் ஒன்று கூட இன்று கிடைக்கப்பெறவில்லை. நாம் நமது மண்ணின் அறிஞர்களையும் வரலாற்றுப் பொக்கிஷங்களையும் அவற்றின் அருமை தெரியாமல் எப்படி மறக்கடிக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கோபால செட்டியாரின் நூல்கள்

இம்மானுவேல் ஸ்வீடன்பர்க்கின் 
"New light upon The Philosophy of India எனும்  நூலை 1923 ல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனில் வெளியிடப்பட்ட அந்நூல் அந்நாளிலேயே 10,000 பிரதிகள் விற்றிருக்கிறது. London Times நாளிதழ் அந்நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளது. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து இயங்கிய அவர் "ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்" என்னும் நூலை  இயற்றியுள்ளார். ஸ்வீடன்பர்க், லத்தீன் மொழியில் எழுதிய நூலை "பதி பசு பாச விளக்கம்" என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

தன்னுடைய 86வது வயதில் 1953ம் ஆண்டு குடியாத்தத்தில் உயிரிழந்திருக்கிறார். இவரது மறைவிற்கு விடுதலை நாளிதழில் துணைத் தலையங்கம் வெளியிடப்பட்டிருக்கிறது. தனி நபர் ஒருவரின் வரலாறு பல திறப்புகளை நமக்கு கொடுக்கிறது. வரலாறு சரியாகப் பதிவு செய்யப்படாத பகுதிகளின் தகவல்களை தனி நபர்களின் குறிப்புகள், செவிவழிச் செய்திகளின் மூலமேனும் தொகுத்து பதிவு செய்திட வேண்டும். அப்பொழுதுதான் நம் ஊரைக் குறித்து நம் சந்ததியினருக்குச் சொல்ல கொஞ்சமேனும் கதைகள் இருக்கும். முதலில் நம்மைச் சுற்றியுள்ள அறிஞர்களை அங்கீகரிக்க வேண்டும். உலகம் முழுவதும் தன் இதழுக்கும் புத்தகங்களுக்கும் வாசகர்கள் இருந்தாலும் தான் பிறந்த ஊரான தருமபுரி மக்களுக்கு தன்னை அறியவில்லையே என்று கோபால செட்டியார் இறுதி வரை வருந்தியிருக்கிறார். வரலாறு முறையாக தொகுக்கப்படாத பகுதிகளில் வாழும் மக்கள் இனியேனும் அதனை அறிய முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் தான் நம் வாழ்வும் தாழ்வும் இருக்கிறது. நமக்கும் நம் சந்ததியினருக்கும் சொல்ல வேண்டிய சேதிகளை நிறைய விட்டுச் சென்றுள்ளனர். தேடுவோமாக!


நன்றி:
  • தருமபுரி பூர்வ சரித்திரம் திருவள்ளுவர் பொத்தக இல்லம்,தருமபுரி|9360224172
  • Swedenborgianism in India:D. Gopaul Chetty and the Marriage of Swedenborg and Saiva Siddhanta-Eleanor Schnarr  

 

இணைப்புகள்:
  • New light upon The Philosophy of India (or)  Swedenberg and Saiva Siddantha-https://amzn.eu/d/iyx5XuZ
  • ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்-https://amzn.eu/d/dd1HBMv
  • Saivism,The Religion or The Ancient Britons
  • சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
  • பதி பசு பாச விளக்கம்
மேற்கண்ட நூல்களின் மின்னூல் வடிவம் தமிழக இணையக் கல்விக்கழகத்தின் தமிழிணையத்தில் கிடைக்கிறது.
  • முப்பொருளுறவு
  • வாழ்க்கை போதம்
  • பரம இச்சாஞான தீபிகை
  • சுடர் சிவஞான சூரன் பராக்கியம்
  • நூதன மறுமை விளக்ககம்
  • தமிழர் சரித்திரம்
  • Leo Tolstoy:His life and teaching
  • New Reformer Essays
  • Chidambara Rahasyam Revealed
மேற்குறிப்பிட்டுள்ள நூல்களின் பிரதிகள் கிடைக்கவில்லை.





Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...