முதல் முறை பெருநகரத்தில் வசிக்க நேர்ந்த பொழுது அன்பினால் சில இன்னல்களுக்கு ஆளானேன். நீ என்ன வேணாலும் செய்யலாம், எப்படி வேணாலும் இருக்கலாம் நான் உன் விஷயத்துல தலையிட மாட்டேன் . நீயும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது. நான் பிரியப்படும் நேரத்தில் நீ என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் நீ பிரியப்படும் நேரத்தில் நான் உன்னுடன் இல்லை என்றால் கோபித்துக் கொள்ளக் கூடாது . அப்படி செய்தால் அது அன்பு அல்ல. என் மனதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும் . ஆனால் நான் அப்படி இல்லை என்றால் கோபித்துக் கொள்ள கூடாது .அப்படி செய்தால் அது அன்பு அல்ல. நான் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். ஆனால் நீ உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. உரிமைக் கோரினால் அது அன்பு அல்ல . "வாய்ஸ் ரீட் பண்ணாத..." "ஃபேஸ் ரீட் பண்ணாத..." இப்படி அறையில் தங்குபவரிலிருந்து வகுப்பில் உடன் படிப்பவர் வரை சொல்லித் திரியும் ஐம்பது பேரையாவது கடந்து வந்திருப்பேன்.
அவர்களிடம் அன்பாக எவ்வாறு இருப்பதென்று என்னால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை. கத்தி மேல் நடப்பது போல் எல்லா சமயங்களிலும் அவர்களின் நிலையைப் புரிந்து நடக்க வேண்டும். மறந்து ஏதோவொரு சமயத்தில் நம் சௌகர்யத்திற்கு நடந்தால் ,அதைப் புரிந்துக் கொள்ளாமல் அதையே ஒரு காரணமாக வைத்து உறவையே முறித்துக் கொள்வது.இந்த கோஷ்டியெல்லாம் நான் டாக் லவ்வர், கேட் லவ்வர், அவைகள் தான் தூய அன்பைச் செலுத்துகின்றன, மனிதர்களெல்லாம் சுயநலமிக்கவர்கள் என்று சொல்லித் திரிகிறது.
எப்படிதான் ஒருவரிடம் பழகுவது என்று சிந்தித்து களைத்து விட்டேன். நான் பல சமயங்களில் எதுதான் அன்பு என்று குழம்பியிருக்கிறேன். நாம் அன்பு என்று நினைத்து செய்யும் செயல் இன்னொருவருக்கு தொல்லையாக இருக்கிறது. பிறர் அன்பு என்று செய்யும் செயல் நமக்கு தொல்லையாக இருக்கிறது. எது அன்பு என்ற கேள்விக்கான பதிலை பிறரிடம் தேடி அதில் தோல்வியே அடைந்திருக்கிறேன். அன்பு குறித்து ஒவ்வொருவரும் ஒரு விளக்கம், வரைமுறை வைத்துள்ளனர். இறுதியில் அன்புக்கான விளக்கத்தை யாராலும் அருதியிட்டுக் கூற முடியாது. நாமே தான் அனுபவரீதியாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். இந்த நூலிலும் அதற்கான விடையைக் காண முற்பட்டேன். இதிலும் எனக்கு தோல்வியே.
ஒவ்வொரு ஜீவனும் அன்பிற்காகத்தான் ஏங்குகிறது. அன்பு பெரும்பாலும் நிபந்தனையுடன் தான் வருகிறது. அது உரிமையையும் கோறுகிறது. நிபந்தனையற்ற அன்பு என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அது சாத்தியப்படும் இடங்கள் பெரும்பாலும் எதிர்வினை ஆற்றாத,ஆற்றவியலாத இடங்களாகவே இருக்கிறது.தன் எழுத்தைப் படிக்காதவர்களிடம் தான் பழகுவதில்லை என்ற பெருமாளின் நிபந்தனையால் புவனேஸ்வரியிடமான அன்பில் விரிசல் விழுகிறது. ஒவ்வொருவரும் தம்மையே இன்னொருவரிடம் தேடுகின்றனர். தான் செய்ய நினைத்து, தன்னால் செய்ய முடியாத சாகசங்களைச் செய்பவர்களால் ஈர்க்கப்படுகின்றனர்.
அந்த தேடலின் முயற்சியில் அலைந்து திரிந்து அப்படி ஒருவர் கிடையவே கிடையாது என்று உணர்கின்றனர். எங்கு உண்மையான அன்பு கிடைக்கும் என்று ஏங்கி, பல பேரிடத்தில் அன்பு வைத்து ,அவர்களிடன் ஏமாற்றம் அடைந்து ஒரு மாதிரியாக அடித்து துவைத்துப் போட்ட நிலையிலே பலர் உள்ளனர். அதிசயமாக அப்படி ஒர் இடத்தில் அந்த அன்பு கிடைத்தாலும் அவர் ஒரு பரிசோதனை எலியாகி விடுகிறார்.தன் கடந்த கால அனுபவங்களால், இந்த சூழ்நிலைக்கு எப்படி வினையாற்றுகிறார் என்று சோதிக்கத் தொடங்கி விடுகின்றனர். அவரிடம் காயப்படும்படியாக எந்த எதிர்வினையும் வரவில்லை என்றால், இதுதான் சாக்கு என்று மனம் துள்ளிக் குதித்து அவரிடம் அன்பு மழைப் பொழிந்து, ஒரு கட்டத்தில் அவரை வதைக்க ஆரம்பித்துவிடுகின்றனர். வைதேகி பெருமாளைச் சந்திப்பதற்கு முன் அப்படி ஒரு அன்பை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். பெருமாளும் குடும்பம் என்ற அமைப்பில் சிக்கி அவளின் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்.
நாவலில் பல இடங்களில் பெருமாள் அன்பு குறித்து தன்னுடைய புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கையில் சிரிப்பினை அடக்க முடியவில்லை. ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்பு குறித்து இப்படி ஒரு நாவல் இருக்கும். ப்ளாகில் இருந்த சில பதிவுகள் இதிலும் இடம்பெற்றாலும் சுவாரசியம் குறையாமல் புதிதாகப் படிப்பது போலவே உள்ளன. அன்பு என்ற பெயரில் முதியவர்களிடம் உடல்நலம் விசாரிப்பது குறித்து சாரு ப்ளாகில் எழுதியிருந்த பதிவு, அவர்களின் நிலையைப் புரிந்துக் கொள்ள உதவியது. அதனையும் நாவலில் சேர்த்திருக்கலாம். அன்பு என்று நாவலுக்குத் தலைப்பு வைத்து, இதுதான் அன்பு என்று பாடம் எடுக்காமல், அன்பு என்ற பெயரில் தான் பிறர் மீதும் பிறர் தம் மீதும் நடத்தும் வன்முறைகளை, அது அன்பு அல்ல, வன்முறை தான் என்று உணரச் செய்கிறது நாவல்.
நூல் : அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு
ஆசிரியர் : சாரு நிவேதிதா
வெளியீடு : எழுத்து பிரசுரம், ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க்
விலை : 340
நூலை வாங்க:

Comments
Post a Comment