Skip to main content

ஓர் எரிச்சல் பதிவு


 “அந்த சோயாவ வெச்சி ஒன்னு செய்யும் பாருங்க…ஓட்டல் கூட தோத்துடணும். ஒம்பதாங் க்ளாஸ் தான் படிக்கிது. வீட்ல எல்லா வேலையும் செய்யும்‌. ஒடம்பு பெருசா இருக்கறதுக்கு காலைல ஓடிட்டு ஸ்கூல் போகும். கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம் போய்ட்டு ஏதோ அவார்டுலாம் வாங்கிருக்கு.” கண்ணில் அப்படி ஒரு பெருமை அந்த மூதாட்டிக்கு. வயது அறுபதை நெருங்கியிருக்கலாம். 

அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த இரண்டு பெண்மணிகளுக்கும் அவருக்கும் அதற்கு முன்னர் பழக்கம் இருந்தது போல் அவர்களின் உடல்மொழி இல்லை. பேருந்தில் அமர்ந்திருந்த ஐந்து நிமிட பழக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களும், தன் பேத்தியைக் குறித்த பெருமிதத்தில் திளைக்கும் அந்த நெடிந்த, மெல்லிய தோற்றமுடைய அம்மூதாட்டியை உண்மையிலே ரசிப்பது போன்றதொரு பொய்யான பாவனையை காட்டிக் கொண்டிருந்தனர். 

அவரின் அருகில் இருந்த இன்னொரு நடுத்தர வயதுள்ள பெண்மணி இக்காட்சியைக் கண்டு, அப்பெருமிதங்களுக்கெல்லாம் சொந்தக்காரர் போல் நெளிந்துக் கொண்டிருந்தார். அம்மூதாட்டியின் மருமகளாக அவர்‌ இருப்பார் என்பது என் கணிப்பு. மூதாட்டி விட்டதும் அப்பெண்மணி தொடங்கலானார். “பையன் செவன்த் படிக்கிறான், பொண்ணு நைன்த் படிக்கிறா. வேணா, படீனு சொன்னாலும் எல்லா வேலையையும் இழுத்து போட்டுட்டு செய்யுவா. ஒடம்பு ஏறிடும்னு ஹெல்த் கான்ஷியஸ் இப்பவே. படிக்கிறதும் நல்லா படிப்பா”. அவர் சொல்லி முடித்ததும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்மணி, சட்டெனத் தாக்கப்பட்டவர் போல், “என் பையனும் நல்லாதான் படிச்சிட்டு இருந்தான்.‌ எடுத்தா பர்ஸ்ட் ரேங்க் தான். எல்லாம் அவங்கப்பா உயிரோட இருந்த வரைக்கும்.‌ இப்ப ஸ்கூலுக்கே போறதில்ல…” “அச்சச்சோ…அப்பிடினா‌ ஹாஸ்டல்ல போட்ருங்க. அங்கதான்‌ நல்லா சொல்லிக் குடுக்குறாங்களாமே…” என தொடர்ந்தது அவ்வுரையாடல். 

என்னுடைய நிறுத்தம் வரவே அந்தக் கண்றாவியான உரையாடலைக் கேட்பதிலிருந்து தப்பித்து விடுதிக்கு வந்தால், “மூளலாம் நல்லா வேல செய்து, சாப்பாடு வாசன வந்த உடனே போய் தட்டுல போட்டு எடுத்துனுவானுது….ரெண்ட்ற‌ வயசுதான் ஆவது. என் பேத்தி…” என சமையல் செய்யும் அக்கா என்னை நோக்கி கூறிக்கொண்டே வந்தார். இன்னைக்கி எழுந்திருச்ச‌ நேரம் சரியில்ல என எனக்கு நானே கூறிக்கொண்டு வந்து அமர்ந்தேன். 

ஒரு இரண்டரை வயது குழந்தை உணவின் மணமறிந்து தனக்கு வேண்டும் என கேட்பது, ஒன்பதாம் வகுப்பில் தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைப்பது ஒரு பெருமையா இந்த தாய்மார்களுக்கு. அட பெருமையாகவே இருக்கட்டுமே. அதை ஏன் இப்படி அடுத்தவர்கள் காதில் வம்படியாக திணிக்கிறீர்கள். அந்த மூதாட்டியையும் பெண்மணிகளையும் சடுதியில் அநுக்கமாகியது எது. ஒரு புதியவரிடம், என் பையன் எவ்ளோ பெரிய புடுங்கி தெரியுமா. உன்‌ பையன் என்ன புடுங்கிட்டு இருக்கான் என்று வினவுவதைத் தவிர இந்த மட்டி மூளைகளுக்கு வேறேதுமே தெரியாதா. ஒரு சமூகமே ஏன் இப்படி அநியாயத்துக்கு தன் பிள்ளைகளைக் குறித்த அதீத பெருமிதத்தில் திளைத்து அடுத்தவரின் முகத்தில் மூத்திரம் அடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த ஊரில் யாருமே பிள்ளைகளைப் பெற்றதில்லையா, அவர்கள் வளருவதை எந்த பெற்றோரும் பார்த்ததில்லையா. ஒரு குழந்தையைக் குழந்தையாகவே இருக்கவிடுங்கள். அவர்கள் வயதிற்கேற்ற வேலையை செய்வதையே ஏதோ சாதனையைப் போல் கொண்டாடத் தேவையில்லை. அது அவர்களுக்கும் அவர்களைப் பற்றிய மிகை பிம்பத்தை ஏற்படுத்தி, அடுத்தவர்களையும் ஏளனப்படுத்தும். அதையுந்தாண்டி, ஒரு வளர்ந்த, அறிவார்ந்த சமூகம் தன் பிள்ளைகளைப் போலவே அடுத்தவர்களின் பிள்ளைகளையும் பாவிக்க முயல வேண்டும். இப்படி அடுத்த பிள்ளைகளின் தோல்விகளில், ஆற்றாமைகளில் தன் பெருமிதத்தைத் தேடாது. 

சுருக்கமாகச் சொல்வதென்றால், என் பையன் பொறந்த உடனே அவனா மூச்சு விட்டான், நான் எந்த ஹெல்ப்புமே பண்ணாம அவன் மண்டைல அவனுக்கா முடி மொளச்சுச்சு போன்ற பெருமைகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்தாவது முடியை நட்டுக்கொள்கிறோம். முடியல… 

Comments

  1. AnonymousMay 27, 2025

    நல்ல பதிவு செந்து..

    ReplyDelete
  2. AnonymousMay 27, 2025

    மனுஷங்க பேச எதாவது வேணுமே. இப்டி பேசலனா வன்மத்த கக்க ஆரம்பிச்சிடுவாங்களே.

    ReplyDelete
    Replies
    1. அப்படி பேசுவதுதான் வன்மம். என் கேள்வியும் அதுதான். இரண்டு மனிதர்கள் சந்திக்கும் பொழுது பேசுவதற்கு இந்தச் சமூகத்திடம் ஏதும் இல்லையா?

      Delete

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...