Skip to main content

காஸ்ட் அவே



பேஸ்புக்கில் ஒருவர் எழுதிய பதிவை வாசித்து, ‘காஸ்ட்‌ அவே’ திரைப்படம் பார்த்தேன். திரைப்படம் எனக்கு‌ப் பிடித்திருந்தது. கடிகாரத்தில் முள்ளாக நேரத்தை துரத்திக் கொண்டிருக்கும் நாயகன் (டாம் ஹேன்க்ஸ்) டெலிவரி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். புத்தாண்டின் மாலைக்குள் திரும்பி வருவதாக காதலியிடம் உறுதியளித்துவிட்டு டெலிவரி சம்பந்தமான பிரச்சனை ஒன்றை தீர்க்க மலேசியாவிற்கு விமானத்தில்  செல்கிறார்.  பசிபிக் பெருங்கடலின் மேலே பறந்து கொண்டிருக்கையில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி, அவருடன் பயணித்தவர்கள்‌ இறந்து விட, நாயகன் மட்டும் தப்பி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான். அதன் பிறகு அத்தீவில் அவனுக்கு என்ன நடக்கிறது, மீண்டும் தன் வீடு திரும்பினானா என்பது தான் கதை. கதையைக் கேட்கவே விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா, படமும் அப்படித்தான். இரண்டரை மணிநேரம் சென்றதே தெரியவில்லை.

படத்தில் எனக்குப் பிடித்த அம்சம் எதையும் மிகையாகக் காட்டாதது தான். படத்தின் முதல் முப்பது நிமிடங்களில் நாயகனின் குணாம்சத்தை விளக்க மிகக் கச்சிதமாகக் காட்சிகளை அமைத்திருந்தனர். படத்தில் நாயகனான டாம் ஹேன்க்ஸின் நடிப்பு‌ பிரமாதமாக இருந்தது. இப்படத்தின் கதையைக் கேட்கும் பொழுது உடனடியாக தமிழில் ஒரு திரைப்படம் நினைவிற்கு வந்தது, "நவீன சரஸ்வதி சபதம்". அப்படியே காஸ்ட் அவேயின் கதை, காட்சிகளை உருவியெடுத்து கொஞ்சம் உள்டாவாக்கி நகைச்சுவையாக எடுத்திருப்பார்கள். அப்படத்தைக் காணுகையில் நமக்கு பல கேள்விகள் எழும். அதெப்படி இத்தனை மாத காலமாக கிடைக்கும் உணவு, தண்ணீரை வைத்து வாழ்ந்து, எல்லோரும் அதே உடலமைப்பில் இருக்கிறார்கள்? யாருக்கும் தனிமை உணர்வு வராதா? என்பது போல் பல. 

காஸ்ட் அவேயில், ஆளரவமற்ற தீவில்  மாட்டிக்கொண்டு, தனிமையில், உயிர் பிழைக்கவும் அங்கிருந்து தப்பிக்கவும் அவன் எடுக்கும் பிரயத்தனங்கள் உடல் மொழியிலும் உருவ மாற்றத்திலும் நாயகன் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.‌ இவ்விடத்தில் தமிழ் சினிமாவில், நடிகர் விக்ரமைக் குறித்து சொல்லுவதற்கு ஒன்றுள்ளது. கதாப்பாத்திரத்திற்காக உருவத்தை மாற்றுவதற்காக அவரின் உழைப்பு வெகுவாக பாராட்டப்படவும், அதற்கான உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இங்குள்ளது. ஒரு படத்தின் கதையோட்டத்தில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்படும் மாற்றங்கள், அதன் தன்மை தான் இயல்பாக அதன் உருவ, உடல் மாற்றத்தை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். இல்லையெனில், வெறுமனே மாறுவேடப் போட்டியில் பங்கேற்பதுபோல் தான் பயனின்றி நடிகரின் உழைப்பு வீணாகும். விக்ரம் நடித்த தங்கலானை  எடுத்துக் கொண்டால், அப்படத்தின் திரைக்கதையும் எக்ஸிகியூஷனும் பலவீனமாக இருக்கும். அதனால் விக்ரமின்  கெட்டப்பால் மட்டும் அப்படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அதுபோல் தான் பல படங்களில் அவர் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் தராமல் வெறுமனே தன்னுடைய அர்பணிப்பைக் கொட்டுகிறேன் என்று அவர் எடுக்கும் பல முயற்சிகள் வீணாகின்றன. காஸ்ட் அவேயின் கதைக்கு ஏற்ப நாயகனின் உடலமைப்பின் மாற்றங்கள் சரியாக பொருந்தியிருக்கும். 

தீவில், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நெருப்பை வரவைத்த பொழுது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் இப்படத்தின் உச்சம் எனலாம். நான்கு வருடங்கள் அவனுக்கு இடமளித்த தீவை விட்டு கிடைக்கும் பொருட்களை வைத்து செய்த தெப்பத்தின் மூலம் கடலுக்குள் செல்கையில்,  சிறிது பிரிவுத் துயர் நமக்கும் நிச்சயம். கரை ஒதுங்கிய பார்சலில் கிடைக்கும் வாலிபால் பந்துடன் அவனுக்கிருக்கும் உறவு அவனைப் பெரிதும் தனிமையில் சிக்காமல் மீட்கிறது. 

நிற்க நேரமில்லாமல், தன் காதலி கொடுக்கும் பரிசில் கூட கவர் நல்லாருக்கு, பாக்ஸ் நல்லாருக்கு என்று தன் தொழிலின் சிந்தனையிலேயே திரியும் ஒருவன், திடீரென தனியாக தப்பிக்க இயலாமல் தீவில் மாட்டிக்கொள்கிறான். காலம் அவனுக்கு அங்கே உறைந்துவிடுகிறது. அதன் பிறகு அவனுக்கு நேரத்தைக் குறித்து, உறவுகள், மனித வாழ்வின் அர்த்தம் குறித்தெல்லாம் எழும் கேள்விகளையோ புரிதல்களையோ காட்டியிருந்தால் மிகச்சிறந்த படமாக இது வந்திருக்கும்.

அவன் தப்பித்து ஊர் திரும்பிய பின்னரும் கூட, நாயகன் தான் இல்லாத பொழுது அங்கு நடந்த மாற்றங்களைக் கண்டு, வாழ்வின் அபத்தங்கள் குறித்த அவனுடைய பார்வைகளையோ மனவோட்டங்களையோ நம்மால் பெரிதாக அறியமுடிவதில்லை. தீவில் மாட்டிக்கொண்ட‌ புதிதிலும் உடனே உடனே அவன் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதை அடுத்தடுத்த காட்சிகளில் காட்டிவிடுகின்றனர். மைண்ட் வாய்ஸை உபயோகிக்காதது பெரிய ஆறுதல்தான்‌. ஆனால் நாயகனின் அகக்கண்ணோட்டத்தையும்  நம்மால்  அறிய முடிவதில்லையே. அதனால் ஒரு விறுவிறுப்பான சர்வைவல் ட்ராமாவாக படம் முடிவடைந்து விடுகிறது. சில குறைகள் இருப்பினும் ஒரு நல்ல சினிமா அனுபவத்தை இப்படம் நமக்களிக்கும். 

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...